ஆழ்துளை கிணறுகளை மூட அரசாணை: வெல்லமண்டி நடராஜன்
தண்ணீர் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக மூடிட அந்தந்த வருவாய் மாவட்டங்களுக்கு அரசாணை வழங்கியுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான். இதையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறுவனின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, கட்சியின் சார்பில் 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறினர். அதன்படி நேற்று மாலை சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட 10 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரெத்தினவேல் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட 10 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளதாகவும், சிறுவன் சுர்ஜித் தாய்க்கு அரசு பணி கிடைப்பதற்கு விரைவில் ஆவணம் செய்கின்றோம் என்ற தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் இனி இதுபோன்று ஒரு சம்பவம் நிகழக் கூடாது என்பதற்காக தண்ணீர் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக மூடிட அந்தந்த வருவாய் மாவட்டங்களுக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Newstm.in
newstm.in