வாகனத்தை சேதப்படுத்திய காட்டுயானை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வனத்துறையினர்!
பொள்ளாச்சி அருகே உள்ள புளிய கண்டியில் ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் வாகனத்தை யானை சேதப்படுத்தியதில் அதிர்ஷ்ட வசமாக வனத்துறையினர் உயிர் தப்பினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட நவமலை பகுதியில் கடந்த 25ம் தேதி ரஞ்சனா மற்றும் 26ம் தேதி மாகாளி என்ற இருவரை ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இதனால் அச்சமடைந்த மலைவாழ் மக்கள் யானையை அடர்ந்த வனப்பகுதிக்கும் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, வனத்துறையினர் மூன்று குழுக்களை அமைத்து காட்டு யானையை கண்காணித்து விரட்டும் பணியில் கடந்த ஒரு வார காலமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு ரஞ்சனாவை தாக்கிய காட்டு யானை சமாதிக்கு அருகே சென்று இரவு முழுவதும் பிளறி உள்ளது.
இது குறித்து மலைவாழ் மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புளிய கண்டி பகுதியில் தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆக்ரோஷ்மாக வந்து தாக்கியது. வனத்துறையினர் கூச்சலிட்டும் ராக்கெட் விட்டும் காட்டு யானையை விரட்டினர். மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in