சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்!
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மன் சிம்மவாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷபவாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து அம்மன் புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருளினார். காலை 11 மணியளவில், மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தும், தேரை வடம் பிடித்து இழுத்தும் சென்றனர். இன்று இரவு 9 மணிக்கு தேரிலிருந்து அம்மன் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார். திருவிழாவையொட்டி சமயபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
newstm.in
newstm.in