Logo

சேலம்: விபத்தில் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு மருத்துவர்கள் சாதனை!

சேலத்தில் 11வயது சிறுவனுக்கு விபத்தில் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
 | 

சேலம்: விபத்தில் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு மருத்துவர்கள் சாதனை!

சேலத்தில் 11வயது சிறுவனுக்கு விபத்தில்  துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த 8 ஆம் தேதி காற்று பிடிக்கும் கம்ப்பிரசர் வெடித்து சிதறியதில் ராமன் - சித்ரா தம்பதியின் 11 வயது மகன் மௌலீஸ்வரனின் கை துண்டானது. மேலும் சிறுவனின் தொடை எலும்பிலும் முறிவு ஏற்பட்டது. விபத்து நடந்த அரை மணி நேரத்திற்குள்ளாக சிறுவனை பெற்றோர்கள் சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடனடியாக உடல் உறுப்பு ஒட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேந்திரன் தலைமையில் 20 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிறுவனுக்கு துண்டான கையை மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் துண்டான கை மீண்டும் இணைக்கப்பட்டது. மேலும் சிறுவனின் காலில் ஏற்பட்ட தொடை எலும்பு முறிவிற்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து 15 நாட்களை கடந்துள்ள நிலையில் சிறுவனின் உடல்நிலை தற்போது நன்றாக முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறுகையில், சிறுவனின் கை துண்டான அரை மணி நேரத்திலேயே சிறுவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டு உடல் உறுப்பு ஒட்டு அறுவை சிகிச்சை, எலும்பு அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் என 20 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சுமார் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மூலம் துண்டான கையை இணைத்து உள்ளதாகவும், தற்போது சிறுவனின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், நவீன அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அரசு மருத்துவமனையில் உள்ளதால் பொதுமக்கள் இதுபோன்ற விபத்து நேரிடும்போது காலம் தாழ்த்தாமல் விரைவாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என தெரிவித்த மருத்துவர்கள் துண்டான உடல் உறுப்புகளை பாதுகாப்பாக ஐஸ் பாக்ஸில் வைத்து அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயமாக துண்டான உடல் உறுப்புகளை மீண்டும் இணைக்க முடியும் என தெரிவித்துள்ளனர். 

இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் சூழ்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP