புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்.. இளைஞர் வெட்டிக்கொலை.. பதற்றம்
கடலூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம் மேல்பாதி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (28) கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்களுக்கும், மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள்.
அப்போது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்களுக்கும் மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து, சிறிதுநேரம் கழித்து வேல்முருகன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் வேல்முருகனை சரமாரியாக வெட்டியது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை முட்புதரில் வேல்முருகன் உடல் கிடப்பதை கண்ட கிராம மக்கள் அங்கு திரண்டனர். அங்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லிக்குப்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
newstm.in