இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தடியை வீசிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
கோவையில் வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம் மீது தடியை வீசி எறிந்த உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோட்டூர் காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சம்பந்தம். இவர் நேற்று கோட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது கோவையை சேர்ந்த அப்சல், அன்வர், சர்தார் அலி ஆகியோர் ஒரு இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளனர். மூன்று பேர் வருவதை கண்ட போலீசார் வாகனத்தை நிறுத்த சொல்லியும், அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் தனது கையிலிருந்த தடியை இருசக்கர வாகனத்தை நோக்கி வீசினார். தடியானது வாகன சக்கரத்தில் சிக்கியதில் அந்த இளைஞர்கள் மூன்று பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டது. பின்னர் அந்த இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் போலீசார் தடியை வீசி விபத்து ஏற்படுத்தியதை கண்டித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தடியை வீசி விபத்து ஏற்படுத்திய கோட்டூர் உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Newstm.in
newstm.in