பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த 2 வயது குழந்தை!
ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தடுப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கழிவுநீர் தொட்டியில் தவறிவிழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சிவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுண்டி. இவருடைய 2வயது மகன் மெகினன், வீட்டின் அருகே நேற்று பிற்பகல் விளையாடி கொண்டிருந்த நிலையில், திடீரென காணாமல் போய்யுள்ளார். குழந்தையை பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டின் அருகே கழிவுநீர் செல்வதற்காக 10 அடி ஆழத்தில் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் கழிப்பறை பயன்பாட்டில் இல்லாத நிலையில், தொட்டியில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது.
குழந்தை கிடைக்காததால், சந்தேகமடைந்த பெற்றோர் அந்த தொட்டிக்குள் பார்த்தபோது, குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டணம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in