மயக்க லட்டு கொடுத்து 25 வருஷ திருட்டுத் தொழில்! தமிழகத்தை கலக்கிய ஸ்வீட் ராணி!
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து பயணிகளிடம் திருடும் பெண்ணை போலீசார் கைது செய்தனர். நகையை பறிகொடுத்த பெண்ணிடமே 6 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த பார்வதி (வயது 50). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் செல்வதற்காக கோவை பஸ்சில் பயண டிக்கெட் எடுத்து அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு அருகே அமர்ந்த பெண், லட்டு ஒன்றினை சாப்பிட வழங்கினார். அதனை சாப்பிட்ட பார்வதி மயக்கமடைந்தார். அந்த நேரத்தில் பார்வதி அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகளை நைசாக திருடி விட்டு அப்பெண் மாயமானார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பார்வதி திருப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்ல திருச்சி வந்துள்ளார். அப்போது தனது அருகே வந்து ஒரு பெண் அமர்ந்துள்ளார். அவரை கண்டதும் அதிர்ச்சியடைந்த பார்வதி அங்கிருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவரை பிடித்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே களப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராணி (45) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் மயக்க லட்டு கொடுத்து பார்வதியிடம் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ராணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் பகுதியில் இவரது பெயர் ஸ்வீட் ராணி. எப்போதுமே கைவசம் மயக்க மருந்து கலந்த ஸ்வீட்களை வைத்திருப்பாராம். இப்போதும் அவரிடம் இருந்து மயக்க மருந்து கலந்த லட்டுக்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த பெண் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இப்படி மயக்க மருந்து கலந்த லட்டுக்களைச் சாப்பிடக் கொடுத்து தனியே பயணம் செய்யும் பெண்களிடம் இருந்து இப்படி நகைகளைக் கொள்ளையடித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எத்தனை கனமான செயினாக இருந்தாலும் சில வினாடிகளிலேயே கையில் வைத்திருக்கும் கட்டரின் உதவியால் கத்தரித்து, கொள்ளையடிப்பதில் பலே திருடி என்கிறார்கள். போலீசார் இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
newstm.in