8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்குட்பட்டே நடக்கிறது -நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் சட்டத்துக்குட்பட்டே கையகப்படுத்தப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நில அளவீடு பணிகள் முடிவுற்ற நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விதிகளை மீறி சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையில் மத்திய அரசு தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது. அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிடுகையில், "சுற்றுசூழல் அனுமதி பெற்றே சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று யூகத்தின் அடிப்படையிலே கூறுகிறார்கள். மக்களுக்கு அவசியமான திட்டம் என்பதாலே இதனை அரசு செயல்படுத்துகிறது. யூகத்தின் அடிப்படையில் வழக்குகள் தொடர முடியாது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார். பின்னர் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார்.
இதையும் படிக்கலாமே: #BiggBoss Day 45: ஷாரிக் குடும்பம் மட்டும் அவ்வளவு ஒஸ்தியா?
newstm.in