வாக்களிக்க முடியவில்லையே... வருந்தும் பிரபல நடிகை !
ஹிந்தி திரையுலகின் பிரபல இளம் நடிகையான ஆலியா பட், மக்களவைத் தேர்தலில் தம்மால் வாக்களிக்க முடியவில்லையே என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல இளம் நடிகை ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, வருண் தவான் உள்ளிட்டோர் நடித்துள்ள "கலங்க்" திரைப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு மும்பை நேற்று நடைபெற்றது.
அப்போது அவர்களிடம், மக்களவைத் தேர்தலில் நீங்கள் வாக்களிப்பீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, சோனாக்ஷி சின்ஹாவும் ,வருண் தவானும் நிச்சயமாக வாக்களிப்போம் என பதிலளித்தனர்.
ஆனால், அலியா பட் இதுகுறித்து கூறும்போது, "தனக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தற்போது தான் பிரிட்டன் நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளதால், மக்களவைத் தேர்தலில் தன்னால் வாக்களிக்க இயலாது" என வருத்தத்துடன் தெரிவித்தார்.
முன்னதாக, "ஆலியா பட், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தங்களது ரசிகர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்" என, பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மோடியின் ட்விட்டர் பதிவுக்கு, ஆலியா பட் அளித்துள்ள பதில் பதிவில், "வாக்களிப்பது உங்களின் உரிமை; உங்களின் தெரிவு. உங்கள் உரிமையை பயன்படுத்தி சரியான நபரை தேர்ந்தெடுங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
ஆலியா பட், மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in