தேர்தல் தோல்வி; முதல்வர் ராஜினாமா? அவசர அமைச்சரவை கூட்டம்!
மக்களவை தேர்தலில், காங்கிரஸ் - மஜத கூட்டணி படுதோல்வி அடைந்ததை அடுத்து கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். எனினும், காங்கிரஸ் கட்சி அவரை முழு மனதுடன் ஆதரிப்பதாகவும், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனவும் ஆறுதல் படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு அவசர அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதிக எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள காங்கிரஸ், குறைந்த எம்.எல்.ஏ.,க்களை உடைய மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக இருக்க ஆதரவளித்து வருகிறது. தனிப் பெரும் கட்சியான பாரதிய ஜனதாவிடம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ், மஜதவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்து, பாஜவில் இணைந்தனர். மேலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் பாஜவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
அதே சமயம், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மாநிலத்தில் மாெத்தமுள்ள 28 இடங்களில், 25ல், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஓரிடத்திலும், மஜத ஓரிடத்திலும் வென்று அந்த கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, முதல்வர் குமாரசாமி பதவி விலக தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த சந்தர்ப்பத்தில் அவர் அப்படி செய்தால், பாஜ ஆட்சி அமைத்துவிடும் என்பதால், குமாரசாமியை காங்கிரஸ் சமாதானம் செய்து வருகிறது.
இதற்கிடையே அடுத்த கட்ட முடிவெடுப்பது குறித்து ஆலோசிக்க, அவசர அவசரமாக இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் குமாரசாமி. இதில் அவர் என்ன அறிவிக்கப்போகிறாரோ என காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.
newstm.in
newstm.in