சபரிமலை ஐயப்பன் கோவில்: மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது.
கேராளாவில் உள்ள மிக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். தற்போது மண்டல சீசன் தொடங்கியுள்ளதையொட்டி, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. நடை திறப்பையொட்டி மாலை 5 மணியளவில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறவுள்ளது.
பூஜைகளுக்குப் பின் 18ஆம் படிக்கு கீழே உள்ள தொகுப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது. சன்னிதானத்தில் புதிய மேல்சாந்தி பதவியேற்றப் பின் 18 படிக்கு கீழே நிற்கும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதையொட்டி, நாளை பிற பூஜைகள் நடைபெறாது என்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அதிகாலை முதல் சபரிமலை கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் நாளை மறு நாள் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சி பூஜைக்குப்பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும், மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10.30க்கு அரிவாராசனம் இசைக்கப்பட்டு நடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச. 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
Newstm.in
newstm.in