பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
பீகார் மாநிலம் வைஷாலியில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பீகாரில் இருந்து டெல்லி சென்ற ரயிலான சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ், ஜோக்பானி - ஆனந்த் விஹார் டெர்மினலில் சஹாதை புசர்க் (Sahadai Buzurg) என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. முதலில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அடுத்தடுத்து 8 பெட்டிகள் தடம் புரண்டன.
இன்று அதிகாலை 3. 58 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. முதற்கட்டமாக 6 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிப்படுத்தப்பட்டுள்ளன.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதே விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் தண்டவாளத்தின் அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி இந்த விபத்து குறித்து தனது ட்விட்டர்பக்கத்தில், "ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து வரவேண்டும். என்டிஆர்எப், ரயில்வே, உள்ளூர் அதிகாரிகள் மீட்புப்பணிக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவ வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
Deeply anguished by the loss of lives due to the derailment of coaches of the Seemanchal Express. My thoughts are with the bereaved families. May the injured recover quickly. Railways, NDRF, and local authorities are providing all possible assistance in the wake of the accident.
— Narendra Modi (@narendramodi) February 3, 2019
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய், காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in