முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு - கேரளாவுக்கு அனுமதி
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசு ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாக அமைந்துள்ளது என்ற வகையில், இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில், ஆறுகள் மற்றும் நீர்மின் உற்பத்தி திட்டங்களுக்கான ஒப்புதல் குழு இருக்கிறது. அந்தக் குழுவிடம் கேரள அரசு அனுமதி வாங்கியுள்ளது. இதுகுறித்து அக்குழுவின் அதிகாரிகள் கூறியதாவது:
எந்தவொரு திட்டத்தை தொடங்கும் முன்பாக, அதுகுறித்து தகவல்களை சேகரிப்பது மற்றும் கள நிலவரம் குறித்து ஆய்வுகளை நடத்துவது என்பது அடிப்படையான நடவடிக்கையாகும். இதற்கு அனுமதி மறுக்க முடியாது. ஆகவே, புதிய அணைத் திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையே அணை கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருத முடியாது. அந்தப் ஒப்புதலை பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன்பாக, அனைத்து சிக்கல்களுக்கும் கேரள அரசு தீர்வு கண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக வைத்திருப்பதற்கும், அணையை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 152 அடி வரை உயர்த்துவதற்கும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுமதியளித்தது.தற்சமயம், முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு தமிழக அரசிடம் உள்ளது.
newstm.in
newstm.in