முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர் தான்
பெங்களூரூவில் முத்தலாக் கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில், ‘மனிதவள மேலாளராக பணிபுரிந்து வருபவர் 38 வயதான சமீருல்லா ரஹமத். இவர், தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்ததாக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது அவரது மனைவி ஆயிஷா அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498 (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீருல்லாவின் மனைவி ஆயிஷா கொடுத்த புகாரில், எங்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கணவருக்கு எங்கள் குடும்பத்தினர் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள காரையு, ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும் வரதட்சனையாக கொடுத்தனர். திருமணம் செய்து கொண்டதில் இருந்தே கணவர் பாலியல் மற்றும் மன ரீதியாக தன்னை துன்புறுத்தி வந்தார். சமீபத்தில், கணவர் தந்தையிடமிருந்து ரூ.7 லட்சம் கோரி தனியார் வாழத் தொடங்கினார்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 9 மணியளவில் சமீருல்லா தனது வீட்டிற்கு வந்து முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமீருல்லாவுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால், அவர் நோட்டீசுக்கு பதிலளிக்கவும் இல்லை, வழக்கின் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சமீருல்லாவை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது, ஆயிஷா தனது கல்வியை துபாயில் முடித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருடன் திருமணம் முடிந்தபின் அவர் பெங்களூருக்கு வந்தார்.
முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது.
newstm.in