தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? அதுக்கு இவரு தான் காரணம்
அவசர ரயில் பயணங்களுக்காக வழங்கப்பட்டு வரும் தட்கல் புக்கிங் சேவையை ஒரு சாப்ட்வேர் மூலம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதித்த சிபிஐ ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடைசி நேரத்தில் ரயில் பயணம் செய்ய முடிவெடுப்பவர்களுக்கு டிக்கெட் கிடைக்க ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு தட்கல் சேவை துவக்கப்பட்டது. ரயில் கிளம்பும் முந்தைய நாள், இந்த சேவையை பயன்படுத்தி ஆன்லைனிலும் (irctc.co.in), கவுன்டர்களிலும் டிக்கெட் பெறலாம். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். குறித்த நேரத்தில் புக்கிங் செய்யமுடியாவிட்டால், சில தனியார் ஏஜெண்டுகள் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்து தனி கட்டணம் வேறு வசூலித்து வருகிறார்கள்.
ஆன்லைன் மூலம் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, சில நொடிகளில் தட்கல் கோட்டா சீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வாடிக்கை. இந்நிலையில், சிபிஐ அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அஜய் கர்க் என்ற தொழில்நுட்ப வல்லுநர், ரயில்வே டிக்கெட் புக்கிங் இணையதளத்தை ஏமாற்றி டிக்கெட் புக் செய்ய ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளார். அதை ஏஜெண்டுகளிடம் விற்று காசு சம்பாதித்துள்ளார். இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யும் ஏஜெண்டுகள், ஒரே நேரத்தில் 1000 டிக்கெட்கள் வரை புக் செய்ய முடியுமாம். புக்கிங் திறந்தவுடன், சில நொடிகளிலேயே ஏஜெண்டுகள் ஆயிரக்கணக்கில் டிக்கெட்களை புக் செய்து வருவதால், பொதுமக்கள் பலமுறை தட்கல் சேவையை பயன்படுத்த முயற்சித்து ஏமாந்து போகிறார்கள்.
இதற்கு முன், ரயில்வே இணையதள தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த கர்க், அதில் உள்ள பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார். முன்கூட்டியே இதை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தால், டிக்கெட் புக்கிங்கில் இத்தனை ஆண்டுகள் இவ்வளவு மோசடி நடந்திருக்காது. இந்த விஷயத்தை கண்டுபிடித்த சிபிஐ அதிகாரிகள் கர்க்கை கைது செய்துள்ளனர். உடனடியாக ரயில்வே இணையதளத்தில் உள்ள பலவீனங்களை சரி செய்யவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
newstm.in