இலவச வைஃபை அறிவிப்பு.. தேர்தலுக்கான முன்னேற்பாடு?
டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதையடுத்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில், டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், டெல்லி முழுவதும் இலவசமாக இணையதள சேவை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி டெல்லி மக்களுக்கு மாதந்தோறும் 15 ஜிபி டேட்டா இணையதள சேவை இலவசமாக வழங்கப்படும். இதற்காக டெல்லி முழுவதும் 11 ஆயிரம் ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும். பேருந்து நிலையங்களில் 4000 ஹாட்ஸ்பாட்டுகளும், சந்தை பகுதிகளில் 7000 ஹாட்ஸ்பாட்களும் அமைக்கப்படவுள்ளது. வரும் 16-ம் தேதி முதல்கட்டமாக 100 ஹாட்ஸ்பாட்டுகள் தொடங்கி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இது போன்ற திட்டங்களை அறிமுகம் செய்கிறாரா? என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Newstm.in
newstm.in