சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன: நாகேஸ்வர ராவ்
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான் சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதற்கு முன், மேற்கு வங்க மாநில காவல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக்குழு இவ்வழக்கை விசாரித்து வந்தது.
அப்போது இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டும், காணாமலும் போய் உள்ளன. மேலும், இருப்பில் உள்ள ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்க மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதில் ராஜீவ் குமாருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனடிப்படையில்தான் அவரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ முயன்றது.
ஆனால், காவல் ஆணையரின் இல்லத்திலிருந்து சிபிஐ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மூத்த சட்ட ஆலோசகர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகேஸ்வர ராவ் தெரிவித்தார்.
newstm.in
newstm.in