தடியில் புல்லாங்குழல் வாசிக்கும் போலீஸ்காரரர்!
கர்நாடகாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், சட்டம் ஒழுங்கை காக்க போலீசார் பயன்படுத்தும் தடியில் துளைகளிட்டு, புல்லாங்குழல் வாசிக்கும் செயல், சக போலீசார் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மங்களூரை சேர்ந்வர், சந்திரகாந்த் ஹுடாகி. அந்த மாநில காவல்துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். பள்ளிப் பருவம் முதலே, புல்லாங்குழல் வாசிப்பதில் ஆர்வம் உடைய இவருக்கு, காவல்துறையில் பணியில் சேர்ந்ததும், இசையை அனுபவிக்க நேரம் கிடைக்காமல் போனது.
பணி நேரத்திற்கு சில மணி நேரம் முன்னரே, பணியிடத்தில் இருக்க வேண்டிய சூழல் பல முறை நேர்ந்தது. அந்த நேரத்தை தன் இசை ஆர்வத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்திரகாந்த், காவலருக்கான பைபர் தடியில் துளைகள் இட்டு, அதை புல்லாங்குழல் போல் பயன்படுத்த துவங்கினார்.
#WATCH Karnataka: Chandrakant S Hutagi, Head Constable from Hubli Rural Police station plays flute, he converted from his fiber baton. Hutagi says, "Playing flute has been my hobby since High School...I use it for both purposes now, maintaining law&order as well as playing flute" pic.twitter.com/CaX6yyWUu1
— ANI (@ANI) May 29, 2019
அவரின் இசை திறமையில் மயங்கிய சக காவலர்கள், தங்கள் டென்ஷனை குறைத்துக் கொள்ள, சந்திரகாந்த்தை புல்லாங்குழல் வாசிக்கச் சொல்வதை பழக்கப்படுத்திக் கொண்டனர்.
இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரியவே, அவர்கள் விசாரணை நடத்தினர். தனக்கு இசை மீது மிகுந்த ஆர்வம் எனவும், பணி நேரத்தில் மிகவும் அயர்ச்சி ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் பணிச் சுமையால் தனக்கும் சக காவலர்களுக்கும் மனச் சோர்வு ஏற்பட்டால், அதை போக்கிக் கொள்ள சிறுது நேரம், தடியில் புல்லாங்குழல் வாசிப்பதாக அவர் கூறினார்.
இதை கேட்ட அதிகாரிகள், சந்திரகாந்த்தின் நடவடிக்கைக்கு தடையேதும் விதிக்கவில்லை. இதனால், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் தடியில் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்தும், கேட்டும், பொதுமக்களும் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து வருகின்றனர்.
newstm.in
newstm.in