'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்!
ஹரியானா மாநிலத்தில், 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது சிறுவன், 48 மணிநேர போராட்டத்துக்கு பிறகு இன்று மாலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். அச்சிறுவன் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாகவே அப்பகுதி மக்கள் உணர்ச்சிப்பெருக்குடன் கூறியப்படி அவனை கொண்டாடி வருகின்றனர்.
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்துக்குட்பட்ட பல்சமாத் என்ற கிராமத்தில், தனது வீட்டின் முன் நதீம் கான் என்ற ஒன்றரை வயது சிறுவன் நேற்று முன்தினம் மாலை விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் நதீம் தவறி விழுந்தான். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ நிபுணர்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதலபாதாளத்தில் சிக்கித்தவித்த சிறுவன் சுவாசிக்க, பிராணவாயு செலுத்தப்பட்டு வந்தது. மருத்துவ குழு ஒன்றும் மீட்புப் பணியை முழுவீச்சில் மேற்கொண்டது. கிட்டத்தட்ட 48 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு, சிறுவன் இன்று மாலை உயிருடன் மீட்கப்பட்டான்.
"அறம்" திரைப்பட பாணியில், ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட சிறுவனை, பாதாளத்திலிருந்து மறுபிறவி எடுத்த வந்த அதிசய சிறுவனாகவே அந்த ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆழ்துளை கிணற்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளதால், அச்சிறுவன் தற்போது பரிசோதனைகளுக்காக அக்ரோஹா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
newtm.in
newstm.in