லோக்பால்: மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசு உயர் பதவியில் இருப்பவர்களை விசாரிக்க வகைச் செய்யும் லோக்பால் அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக்பால் அமைப்பை உருவாக்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை மத்திய அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன், இந்த விஷயத்தில் மத்திய அரசு கடைபிடித்து வரும் மெத்தனப்போக்கிற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
newstm.in