கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார்.
கமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்திலும் கீழவை நீதிமன்றங்களிலும் இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. பாஜகவின் அஸ்வினி உபத்யாயா, "கமல் பேசியது இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் .
இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது" என்று கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "தமிழகத்தில் நடந்தது" என்று கூறினார்.
"பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகாமல் ஏன் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினீர்கள்?" என்று நீதிபதிகள் கேட்டதுடன், இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் வரம்புக்குள் வரவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது . தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியமைக்காக, கமல்ஹாசனுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. எனவே யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டிய அவசியமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
newstm.in
newstm.in