முன்னாள் ராணுவ வீரரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! என்ன காரணம்?
வாரணாசி தொகுதியில் தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் (பிஎஸ்எஃப்) தேஜ் பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை. உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் பிரதமர் மோடி மீண்டும் களமிறங்குகிறார். அவருக்கு எதிராக, தங்களது கட்சி சார்பில் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் போட்டியிடுவார் என்று சமாஜ்வாதி அறிவித்திருந்தது.
ஆனால், தேஜ் பகதூரின் வேட்பு மனுவை, வாரணாசி தொகுதியின் தேர்தல் அதிகாரி நிராகரித்தார். பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விளக்கங்களை தருமாறு பகதூருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு தேஜ் பகதூர் யாதவ், உரிய நேரத்தில் விளக்கம் அளிக்காத காரணத்தால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.
இதையடுத்து, தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, தேஜ் பகதூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
"பகதூரின் மனுவை ஏற்றுகொள்வதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. அத்துடன், தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது" எனக் கூறி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேஜ் பகதூர் யாதவ் எல்லைப் பாதுகாப்புப் படை வீரராக இருந்தபோது, வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகக் கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் காரணமாக பணிநீ்க்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in