கூகுள் நிறுவனத்திலும் பாலியல் குற்றச்சாட்டுகள்
உலகெங்கிலும் பெண்கள் தங்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து “மீ டூ’’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பேசத் துவங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொரு நாளும் ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உலகப் புகழ் பெற்றதும், இணைய உலகில் சர்வ வல்லமை படைத்ததுமான “கூகுள்’’ நிறுவனமும்கூட இதில் விதிவிலக்கு அல்ல என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தில், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை, முதன்மைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் 48 ஊழியர்கள், கூகுள் நிறுவனத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர். அதில், 13 நபர்கள் மூத்த மேலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் இருந்தவர்களாம்.
இதுகுறித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள மெமோ அறிக்கையில், பாலியல் குற்றச்சாட்டின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்ட எந்தவொரு நபருக்கும், பணிவிலகல் காலத்தில் வழங்கப்பட வேண்டிய நிதி கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். பாலியல் அத்துமீறல்களை கூகுள் நிறுவனம் மிகக் கொடுமையானதாகக் கருதுகிறது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
செல்போன்களுக்கான ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை உருவாக்கிய ஆண்டி ரூபின், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2014ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும், அவரை நம்பி புதிய திட்டங்களுக்காக பல கோடி ரூபாய்களை கூகுள் நிறுவனம் முதலீடு செய்திருந்ததாம். ஆனால், அதுகுறித்து கவலைப்படாமல் ஆண்டி ரூபின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
newstm.in
newstm.in