நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி தான் இலங்கை குண்டுவெடிப்பு: அமைச்சர் தகவல்
நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே, இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ருவன் விஜேவர்தனே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம்(ஏப்.21) காலை, இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 310 ஐத் தாண்டியுள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர் குண்டுவெடிப்பையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக 26க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இலங்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இலங்கை பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ருவன் விஜேவர்தனே, "நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழி வாங்கும் விதத்திலேயே இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 15ம் தேதி நியூசிலாந்து நாட்டில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
newstm.in
newstm.in