எகிப்து தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
எகிப்தில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியான சம்பவத்திற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
எகிப்தின் கீஸா பகுதியில் உள்ள பிரமிடுகளை பார்க்க வியட்நாம் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தின் மீது திடீரென தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் வியட்நாமை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 3 பேரும், எகிப்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா கைடு ஒருவரும் பலியாகினர். பேருந்து ஓட்டுநர் உட்பட 11 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எகிப்து ராணுவம், கீஸா மற்றும் சைனை பகுதிகளில் நடத்திய சோதனைகளில், தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய அரசின் சார்பாக, எகிப்து தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "டிசம்பர் 28-ஆம் தேதி எகிப்தின் பிரமிடுகளுக்கு அருகே சுற்றுலா பேருந்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் விடுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டிக் கொள்கிறோம். தீவிரவாதிகளுக்கு எதிராக, எகிப்து அரசுடனும் அந்நாட்டு மக்களுடனும் இந்தியா துணை நிற்கும்" என கூறப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in