முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு..!!
சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இந்தப் பூஜை முறைகளைப்பற்றி இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
முதலில் பூஜை செய்யவிருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். ஸ்ரீவிநாயகரே அனைதிற்கும் முழுமையானவர் மற்றும் முதலானவர் என்ற காரணத்தால், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன், விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். மனைப் பலகை ஒன்றில் மாக்கோலம் போட்டு, செம்மண் இட வேண்டும். பின்னர் மாணவ செல்வங்கள் புத்தகங்களுக்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். அன்று புத்தகங்கள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் என ஒவ்வொரு பொருளையும் பூஜையில் வைக்க வேண்டும். வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களான சுத்தி,அரிவாள்மனை,ஆழாக்கு, உழக்கு என எல்லாப் பொருட்களுக்கும் சந்தனம் வைத்துக் குங்குமம் வைக்கலாம். இசை சம்பந்தப்பட்ட, சுருதிப் பெட்டி, வீணை, கிடார், மிருதங்கம், ஜால்ரா அகியவற்றைச் சந்தனம், குங்குமம் இட்டு வைக்கலாம்.
வாழையிலை விரித்து அதில் அன்னைக்குப் பிரியமான சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை நிவேதனமாக படைக்கலாம். அவல், பொரி, கடலை மற்றும் பழங்களும் வைக்க வேண்டும், செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்றவை சரஸ்வதி தேவிக்கு உகந்த மலர்கள்.
சரஸ்வதி பூஜையின் போது 'துர்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம' என்று கூறி பூஜையை தொடங்குவது நன்மைகளை வழங்கும். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே போதுமானது. முப்பெரும் தேவியர்களின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவற்றையும் இறைவனாக வணங்குவதே ஆயுதபூஜை. ஆயுத பூஜையன்று சிறிய ஆணி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து எண்ணை இட்டு, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் நாம் செய்யும் தொழிலுக்கு வருடத்தின் ஒரே நாள் கொடுக்கக்கூடிய மரியாதையாகும்.
பூஜையின் முடிவில் சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்துச் சமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் கருப்பு கொண்டைக் கடலைச் சுண்டல் நிவேதனம் செய்வது சகல செல்வங்களையும் அளிக்கும்.
மனமுருகி அன்னை சரஸ்வதியை வழிபட்டு அறிவுச் செல்வத்தை பெருகச் செய்வோம்.