பன்னாட்டு நிறுவன கப்பல்கள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி ? தமிழக அரசுக்கு கமலஹாசன் கேள்வி !!
கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் , மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏப்ரல் 20 க்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சில தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி சமுக இடைவெளியை கடைபிடித்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீன்பிடிக்க அனுமதியளித்த நிலையில் மீன்பிடி தடை காலத்தினால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னைக்கு மிக அருகாமையில் வெளிநாட்டு கப்பல்கள் தமிழக எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு கொந்தளித்த தமிழக மீனவர்கள், இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி பன்னாட்டு கப்பல்கள் நமது எல்லைக்குள் வந்தது எப்படி என்றும் ? ஏற்கனவே ஊரடங்கினால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை தமிழக மீனவர்கள் இழந்து தவித்து வரும் நிலையில், தமிழர் மீன்பிடி பகுதிக்குள் வெளிநாட்டு கப்பல்களை அனுமதிக்கலாமா..? என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், வெளிநாட்டு கப்பல்கள் தமிழக மீன்பிடி எல்லைக்குள் நுழைந்ததற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?
— Kamal Haasan (@ikamalhaasan) April 18, 2020