எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க யார் உறுதுணையாக இருந்தாலும் அவர்களோடு கூட்டணி வைப்போம்..!
எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், 2026-ல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர கடுமையான பாடுபட வேண்டும் என தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.காவல்துறை செயலிழந்து விட்டது என்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது.தி.மு.க.மைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி, சாதிக் பாஷா ஆகியோரின் வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல தமிழக மக்களுக்காக பொற்கால ஆட்சி நடைபெறவில்லை.
முதலமைச்சரின் குடும்பத்திற்காக பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.எம்.ஜி.ஆருக்கும் - பிரதமர் மோடிக்கு பல ஒற்றுமைகள் இருக்கின்றது என பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு, எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரை போல யாரும் பிறக்கவும் முடியாது. தி.மு.க.வில் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் ஜொலிக்கிறார்கள்.கலைஞரை கூட மறந்துவிட்டார்கள். அதனால் தான் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அவரது பெயரை வைக்கிறார்கள்.அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மாற்றுக் கட்சி கருத்துக்கள் எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.2026 -ல் அதிமுக கூட்டணி எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு, அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி என ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க யார் உறுதுணையாக இருந்தாலும் அவர்களோடு கூட்டணி வைப்போம்.இந்த நிபந்தனைகளை சசிகலா, டி.டி.வி தினகரன் ஏற்றுக் கொண்டால் அவர்களை அதிமுகவில் இணைப்பீர்களா என்ற கேள்விக்கு, சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். பாப்கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி உயர்த்துவது கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.