ஆண் குழந்தை வேண்டும்.. கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர் !
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தசரதன் (எ) மணிகண்டன். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சோபனா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நான்காவது முறையாக சோபனா கர்ப்பமானார். இந்த முறை தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று தசரதன் தன் 8 மாத கர்ப்பணி மனைவியடம் சண்டையிட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவியை அவர் கடுமையாக தாக்க தொடங்கிய அவர் கொடூரமாக அடித்துக்கொலை செய்தார்.
இந்தக் கொலை தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தசரதன் மற்றும் தாய்மாமன் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் மேல்செங்கம் போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இறந்துபோன சோபனாவின் மாமனார், மாமியார், கணவனின் சகோதரி, சகோதரியின் கணவர் என 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள நான்கு நபர்களை கைது செய்யக்கோரியும், இரண்டு தினங்கள் ஆகியும் சோபனாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்காத போலீசாரை கண்டித்தும் சோபனாவின் உறவினர்கள் மற்றும் கிராம வணிகர்கள் தங்களுடைய வணிக நிறுவனங்களை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் தசரதனின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல்செங்கம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சோபனாவின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
அப்போது சோபனாவின் கொலைக்கு காரணமான மணிகண்டனின் அப்பா, அம்மா, அக்கா, அக்காவின் கணவர் ஆகிய நான்கு நபர்களை தேடி கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த பின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
newstm.in