தவெக மாநாட்டுக்கு விஜயின் மெகா ப்ளான்?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மாநாட்டுக்குத் தொடக்க நிகழ்ச்சியாக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை கடந்த 4ஆம் தேதி அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 4.30 மணிக்கு நடைபெற்றது. மாநாட்டு பந்தல், பார்க்கிங், சமையல் கூடம், நுழைவாயில் எனப் பல்வேறு பணிகள் இன்றே தொடங்கவுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற பூஜையில் ஏரளமான நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடுக்கான பந்தல் கால் இன்று அதிகாலை ஊன்றப்பட்ட நிலையில், மாநாடு முடியும் வரை ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்க வேண்டும் எனவும், நம்மைப் பற்றி நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும் என நடிகர் விஜய் வேண்டுகோள் கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் மாநாட்டு ஏற்பாடுகளை நேரடியாகக் கண்காணித்து வருகிறார் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த். இதற்கிடையே மாநாட்டின் நினைவாக 100 அடி கொடிக்கம்பம் 120 சதுர அடி பீடத்துடன் அமைய இருக்கும் நிலையில் அந்த இடத்தை 5 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விஜய் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற இருக்கும் பகுதியில் மாநாட்டின் நினைவாக நிரந்தரமாகச் சுமார் 100 அடி கொடிக்கம்பமும் பிரம்மாண்ட கொடியையும் ஏற்றி வைக்க விஜய் முடிவு செய்திருக்கிறார். மற்ற இடங்களில் மாநாடு நடந்ததும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படும்.
ஆனால் இந்தப் பிரம்மாண்ட கொடி கம்பத்தை நிரந்தரமாக அதே இடத்தில் வைக்க வேண்டும் என விஜய் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக மணி என்பவரது ஐந்து ஏக்கர் நிலத்தை 5 ஆண்டுகளுக்கு விஜய் தரப்பு குத்தகைக்கு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் எட்டு அடி ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டி, 120 சதுர அடி பரப்பரளவில் பீடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. 100 அடி உயர கொடுக்கம்பத்தில் கொடியையும் நிரந்தரமாகப் பறக்க விட விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளது. புயல், மழை, நிலநடுக்கம் என அனைத்தையும் தாங்கும் வகையில் “விண்ட் வெலாசிட்டி” என்ற அமைப்புடன் இந்தக் கொடி கம்பம் அமைய உள்ளது.
மேலும் ஏற்கனவே திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்குத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 100 அடி கொடிக்கம்பத்தை அமைத்துக் கொடுத்த நிறுவனம்தான் தற்போது விஜயின் கட்சிக்கும் கொடிக் கம்பத்தை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டின்போது முதன்முறையாக இந்தக் கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றுகிறார். அதற்குப் பிறகும் இந்தக் கொடிக்கம்பம் நிரந்தரமாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.