விஜய் மல்லையாவின் மனு தள்ளுபடி! நாடு கடத்தப்படுவாரா?
இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லையா ரூ.9,000 கோடி வங்கி மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை வலியுறுத்தி லண்டன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றதுடன், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விரைவில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in