விஜய் சொகுசு கார் விவகாரம் : இன்று விசாரணை!!
சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட விவகாரத்தில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுப்ரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என சாடியதுடன் வரியுடன் சேர்த்து ரூ. 1 லட்சம் அபராதமாக கட்டவேண்டுமென உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு வந்தபோது, அதனை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் அனைவர் மத்தியிலும் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in