அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பின்மை உதவிக்காக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்நாட்டின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து ஜூலை 4 ஆம் தேதி வரை சுமார் 5 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. அதாவது மொத்த தொழிலாளர்களில் சுமார் 31 சதவீதத்தினர் வேலையை இழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பலரும் வேலைவாய்ப்பினை இழந்ததை அடுத்து அவர்களுக்கு உதவ வேலைவாய்ப்பின்மை நல உதவியை அமெரிக்கா அறிவித்தது. அதாவது வேலையின்மை காப்பீட்டு திட்டம் மூலம் மாதந்தோறும் நிதி வழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதனையடுத்து வேலை இழந்தவர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் வேலைவாய்ப்பின்மை உதவிக்காக விண்ணப்பித்தனர். ஆனால் நாட்கள் ஆக ஆக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் நிதி உதவிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. ஆனாலும் கடந்த நான்கு வாரமாக சுமார் 14 லட்சம் பேர் வாரந்தோறும் விண்ணப்பித்து வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு 14 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கடந்த வாரத்தில் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வேலைவாய்ப்பின்மை உதவிக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. அதனைத் தொடந்து உதவி கோருவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கட்டாய பணிநீக்கம் நடைபெறுவதால் ஒவ்வொரு வாரமும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உதவிக்காக விண்ணப்பிக்கின்றனர்.
newstm.in