பரந்தூர் போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் த.வெ.க. தலைவர்..!

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக வெற்றில் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர். தீர்மானத்துடன் நின்று விடாமல், பரந்தூர் மக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டார். இதற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்வு என்பதால் ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று (திங்கட்கிழமை) விஜய் சந்திக்க இருக்கிறார். இதற்கான அனுமதியை போலீசார் வழங்கியுள்ளனர். அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்வு என்பதால் அதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் வைத்து தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கேரவனில் இருந்தபடியே விஜய் உரையாற்ற உள்ளார். மக்களை சந்திப்பதற்கான இடத்தை முடிவு செய்வது பற்றி நீண்ட இழுபறி நிலவி வந்த நிலையில், அம்பேத்கர் திடல் தேர்வு செய்யப்பட்டது.