பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் !! சென்னையில் பெண் பயிற்சி விமானியின் உடல் அடக்கம்.
ஒடிசா மாநிலம், பிர்சாலாவில் ஒரு அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. இங்குள்ள விமானதளத்தில் நாள்தோறும் மாணவர்களுக்கு, சிறிய ரக விமானங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இதேபோல் , கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு விமானி மற்றும் ஒரு பெண் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 2 விமானிகளும் பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து ஒடிசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் , விமான விபத்தில் பலியான பெண் பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா (20), சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர் , விமான நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி முகமது கோரியின் மகள் எனத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து , விபத்தில் இறந்த பெண் பயிற்சி விமானி அனிஸ் பாத்திமாவின் உடல் விமானம் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டது. பொழிச்சலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அப்பெண்ணின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்பு அனிஸ் பாத்திமாவின் உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
Newstm.in