பாரம்பரிய முறைப்படி பொங்கல் தினத்தன்று செய்ய வேண்டிய ரெசிப்பி..!

பாரம்பரிய முறைப்படி பொங்கல் தினத்தன்று செய்ய வேண்டிய ரெசிப்பிக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
அவல் பாயசம்... தேவையானவை: அவல் - 250 கிராம், சர்க்கரை - 200 கிராம், பால் - அரை லிட்டர், முந்திரி, திராட்சை - தலா 10 கிராம், ஏலக்காய் - 4, நெய் - 50 கிராம். செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, அவலை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவல் ஊறியதும், வாய் அகண்ட பாத்திரத்தில் அவலை போட்டு வேக வைக்கவும். அவல் வெந்த பிறகு சர்க்கரை, பால், ஏலக்காய் தூள் அனைத்தும் போட்டு நன்கு கிளறவும். முந்திரி, திராட்சையை சேர்க்கவும். சுவையான அவல் பாயசம் தயார்.
சர்க்கரைப் பொங்கல்... தேவையானவை: புது பச்சரிசி ஒரு கப், சிறு பருப்பு 2 டேபிள்ஸ்பூன், பால் 100 மி.லி, புது வெல்லம் 150 கிராம், முந்திரி, திராட்சை தலா 10 கிராம், நெய் 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் சிறிதளவு. செய்முறை: இரண்டு கப் தண்ணீர், பால் இரண்டையும் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். பாசிப்பருப்பு அரை வேக்காடாகவும், பச்சரிசியை முக்கால் பதத்திலும் வேகவைக்கவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து, வேகவைத்த பொங்கலில் சேர்த்துக் கிளறிவிடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து, பொங்கலுடன் சேர்த்துக் கிண்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். குறிப்பு: இதில் அரை முடி தேங்காயைத் துருவி சேர்த்து கலக்கி பரிமாறினால் சுவை கூடுதலாக இருக்கும்.
மெது வடை... தேவையானவை: உளுந்து 500 கிராம், பச்சரிசி மாவு 100 கிராம், பச்சைமிளகாய் 2, பெரிய வெங்காயம் 2, கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு, மிளகு 10 கிராம், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: உளுந்தை ஒரு மணிநேரம் ஊறவைத்து, கெட்டியாக அரைக்கவும். இதில் பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் , கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பால் வெண் பொங்கல்... தேவையானவை: பச்சரிசி ஒரு கப், சிறுபருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பசும்பால் 100 மி.லி, உப்பு தேவையான அளவு. செய்முறை: இரண்டு கப் தண்ணீரில், பாசிப்பருப்பை அரைப் பதமாக வேகவைக்கவும். பின்பு, அரிசியை நன்றாக வேகவைத்து, அதில் பால் ஊற்றி, உப்பு சேர்த்த நன்கு கிளறி இறக்கவும். தேவை எனில், சிறிது நெய்யில், மிளவு, முந்திரியை வதக்கி சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருக்கும்.
காய்கறிக் கூட்டு தேவையானவை: பூசணிக்காய் ஒரு துண்டு, அவரைக்காய் 100 கிராம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா 2, வாழைக்காய் 1, மொச்சை கால் கிலோ, பச்சைமிளகாய் தேவைக்கு ஏற்ப, துவரம் பருப்பு கால் கிலோ, தேங்காய் அரை மூடி. தாளிக்க: கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். துவரம் பருப்பையும் நறுக்கிய காய்கறிகளையும் உப்பு சேர்த்து, தனித்தனியாக வேகவைத்து பின்னர் ஒன்று சேர்க்க வேண்டும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து ஊற்றவும். நன்றாகக் கொதித்து, கெட்டியாக வந்ததும், தாளிக்கும் பொருட்களை தாளித்து இறக்க வேண்டும். பல காய்கறிகள் ஒன்று சேர்வதால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும்.
பொங்கல் பண்டிகை என்றாலே பழையன கழிதலும், புதியன புகுதலும் தானே... நம்முடைய பழைய பாரம்பரியத்தை மறக்க வேண்டாம். இன்னும் சில ஹெல்த்தியான ரெசிப்பிக்களை கற்றுக்கொள்வோம். நம்முடைய குடும்பத்தின் ஆரோக்கியத்தை காப்போம்...
பார்லி பாயசம்: தேவையானவை... பார்லி -1/4 கப், பால் - 4 கப், கன்ஸ்டண்ட் மில்க் - சின்ன டின், நெய் - 200 கிராம், ஏலக்காய், முந்திரி, திராட்சை - தேவைக்கு ஏற்ப. செய்முறை: 1தே கரண்டி நெய்யில் பார்லியை வறுத்து கொள்ளவும். அதனுடன் 4 கப் பால் சேர்த்து பார்லி வேகும் வரை காத்திருந்து. பால் சுண்டி வரும் போது ஏலக்காய் மற்றும் கன்ஸ்டண்ட் மில்க் சேர்த்து நன்கு கிளறி விடவும். கடைசியாக நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால், பார்லி பாயசம் ரெடி.
ஓட்ஸ் பாயசம்... தேவையானவை: பால் - 1கப், தண்ணீர் - 2 டம்ளர், ஓட்ஸ்- 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கு ஏற்ப, சர்க்கரை- 50 கிராம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உடன் ஓட்ஸ் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும், அதனுடன் காய்ச்சி ஆறிய பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை போட்டு கலந்தால் அருமையான ஓட்ஸ் பாயசம் ரெடி.