இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை..!

முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை அவரது 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவு இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
இந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் விதமாக நாளை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுமே வேலை நாளாக செயல்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்து, அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 15.07.2023 (சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அந்நாளில் காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும், பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.