"இதான் என் டீம், இதவிட்டு எங்கேயும் போக மாட்டேன்" - ரஜினி ஸ்டைலில் பேசிய கோலி!
என்ன நேர்ந்தாலும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைவிட்டுப் பிரியமாட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அதனால் சமூகவலைத்தளங்களில் இவர்கள் ஆக்டிவாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸுடன் விராட் கோலி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் பெங்களூர் அணியுடனான தனது பயணம் அற்புதமானது என்றும், தங்களுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பது தனது கனவு எனவும் டிவில்லியர்ஸிடம் கூறினார்.
பெங்களூர் அணியை விட்டுப் பிரியும் சூழல் எப்போதும் ஏற்படாது, ஐபிஎல் இருக்கும் வரை நான் விளையாடும் வரை பெங்களூர் அணியில் மட்டுமே இருப்பேன், பெங்களூர் அணியின் ரசிகர்கள் தரும் ஆதரவு மெய் சிலிர்க்கச் செய்கிறது என்று கூறினார். கோலியின் கருத்தை ஆமோதித்த டிவில்லியர்ஸ் தனது விருப்பமும் அதுதான் என்று கூறினார்.
newstm.in