3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைப்பு!
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இந்தச் சிறப்புவாய்ந்த சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா நாளை முதல் 3 நாட்கள் கன்னியாகுமரியில் கொண்டாட திட்டமிடப்பட்டது.
அதேபோல, கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து, திறப்புக்கு தயாராக உள்ளது. இந்தக் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவுள்ளார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக கன்னியாகுமரி முழுவதும் களைகட்டியுள்ளது. கடல் நடுவே திருவள்ளுவரின் சிலை இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் லேசர் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லேசர் ஒளி வெள்ளத்தில் திருவள்ளுவர் சிலை இரவில் வண்ணமயமாக ஜொலிக்கிறது. கன்னியாகுமரி சுற்றுவட்டாரம் முழுவதும் மின்னொளிகளால் வெள்ளி விழாவை நினைவு கூறும் வகையில், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31 ஆம் தேதியே நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அம்பத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.