1. Home
  2. தமிழ்நாடு

தன் மனைவி இறந்தது தெரியாமல் , 2 நாட்களாக சடலத்திற்கு பால் ஊட்டி வந்த பரிதாபம் !!

தன் மனைவி இறந்தது தெரியாமல் , 2 நாட்களாக சடலத்திற்கு பால் ஊட்டி வந்த பரிதாபம் !!


மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் கிழக்கு ஏழாவது தெருவைச் சேர்ந்தவர்கள் பாண்டி (90) ஆண்டாள் தம்பதியினர். இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இவர்களில் ஒரு மகனும் மகளும் இறந்து விட்டனர்.

இதையடுத்து 4 பிள்ளைகளில் 3 பேர் தங்களது குடும்பத்தினருடன் கோவையிலும் ஒருவர் தேனி மாவட்டம் அல்லிநகரத்திலும் வசித்து வருகின்றனர். நன்கு வசதி படைத்தவரான பாண்டி திருமங்கலத்தில் தனது மனைவி ஆண்டாளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் முன் பகுதியை வாடகைக்கு விட்டு விட்டு பின்புறம் வசித்து வந்துள்ளார். பெற்றோர்களை பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் ஆண்டாள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருக்கும் மனைவியை பாண்டி பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பாண்டியின் பிள்ளைகள் வந்து பார்க்க முடியாத நிலை இருந்து வந்தது. பாண்டி உணவிற்காக சிரமப்பட்டு உள்ளார். இதனை அறிந்த அவரது மகன்கள் திருமங்கலத்தில் உள்ள தங்களது உறவினர்களிடம் பெற்றோர்களுக்கு உணவளிக்குமாறு தெரிவித்துள்ளனர். அவர்களும் அவ்வப்போது உணவு வழங்கி வந்தனர்.

தன் மனைவி இறந்தது தெரியாமல் , 2 நாட்களாக சடலத்திற்கு பால் ஊட்டி வந்த பரிதாபம் !!

இந்நிலையில் திருமங்கலத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் திருமங்கலம் நகர் பகுதியில் ஊரடங்கு தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உறவினர்களும் வெளியில் வரமுடியாத சூழல் உருவானது. இதனால் உணவுக்கு சிரமப்படுவதாக பாண்டி தனது பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாண்டியின் மகள் நாகலட்சுமி அரசின் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு திருமங்கலத்தில் உள்ள தனது பெற்றோருக்கு உணவு அளிக்குமாறு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் திருமங்கலம் கோட்டாட்சியர் சௌந்தர்யாவுக்கு தெரிவிக்கப்பட்டு அவரது உத்தரவின்பேரில் திருமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் நேற்று இரவு உணவு எடுத்துக் கொண்டு பாண்டியிடம் கொடுப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாண்டியின் மனைவி ஆண்டாள் உடம்பில் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக தரையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்று கோட்டாட்சியரிடம் தகவல் அளித்தார்.

தகவல் அடிப்படையில் அங்கு வந்த கோட்டாட்சியர் சௌந்தர்யா, வட்டாட்சியர் தனலட்சுமி, திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருண் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்து ஆண்டாள் உடலைப் பார்த்தபோது அவர் 2 நாட்களுக்கு முன்பு இறந்தது தெரியவந்தது.

மேலும் தனது மனைவி இறந்தது தெரியாமல் 2 நாட்களாக மனைவிக்கு முதியவர் அவ்வப்போது பால் ஊட்டியது தெரிய வந்தது.  இதனை அடுத்து இறந்த ஆண்டாள் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆண்டாள் இறந்த சம்பவம் குறித்து அவர்களது பிள்ளைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like