புதுமாடல் பைக்கால் போலீசிடம் மாட்டிக் கொண்ட திருடன்? எப்படி தெரியுமா?
தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 சவரன் செயினை பறித்துச் சென்ற கொள்ளையன் விலையுயர்ந்த புது மாடல் பைக்கால் போலீசிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி ரோச் காலனி பகுதியைச் சேர்ந்த ஆஷா (30) தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஆஷா கழுத்தில் இருந்த 17 சவரன் தங்க நகையை பறித்து விட்டு சென்றார்.
இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்டையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததின் மூலம் தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த நயினார் (வயது 21) செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூபாய் 6,00,000 மதிப்பிலான 17 சவரன் தங்க நகை கைப்பற்றப்பட்டது. அவர் சிக்கிக் கொண்டதற்கு பின்னால் பைக் இருப்பது தெரியவந்துள்ளது.
திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் நவம்பர் மாதம் தான் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமாதிரியான இருசக்கர வாகனம் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக குறைவு என்பதால் வாகனத்தை விற்பனை செய்த இருசக்கர வாகன விற்பனையகம் மூலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேட ஆரம்பித்தனர்.
அதன் விளைவாக நயினார் சிக்கிக் கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
newstm.in