ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்க 22 கிலோ மீட்டர் பயணம் செய்த குரங்கு..!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் பகுதியில் உள்ள பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு குரங்கு ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது வனத்துறையினர் குரங்கை பிடிக்க திட்டமிட்டு பள்ளிக்கு வந்தனர்.
ஆனால் குரங்கை எளிதாக பிடிக்க முடியாத காரணத்தால் அந்த ஊரைச் சேர்ந்த பொது மக்களை வனத்துறையினர் உதவிக்கு அழைத்தனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன் குரங்கை திசை திருப்பி பிடிக்க முயன்றார். இதனால் கடும் கோபம் அடைந்த குரங்கு ஜெகதீசன் மேல் பாய்ந்து பயங்கரமாக தாக்கியது.
இதையடுத்து வனத்துறையினர் குரங்கை மடக்கி பிடித்து 22 கிலோ மீட்டர் தொலைவில் குரங்கை விட்டு வந்துள்ளனர். சில மணி நேரத்தில் மீண்டும் குரங்கு அந்த ஆட்டோ ஓட்டுனரை தேடி வந்து ஆட்டோவில் மேல் குதித்து ஆட்டோவின் கவரை நாசமாக்கி ஜெகதீசனை தாக்கியுள்ளது.
இதனால் அவர் பயந்து போய் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார். இந்த சம்பவம் நடந்து ஏழு நாட்கள் கடந்த நிலையிலும் அந்த குரங்கு அவரது வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்.