கள்ளநோட்டு கும்பல் தலைவன் தலை துண்டித்துக் கொலை.. ஊரடங்கை பயன்படுத்தி கூட்டாளிகள் வெறிச்செயல்..!!
தொழில் போட்டி காரணமாக ஊரடங்கை பயன்படுத்தி கள்ளநோட்டு கும்பல் தலைவனை அவரது கூட்டாளிகளே தலை துண்டித்து கொலை கொடூரம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் எல்லம் கவுடு. இவர் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவது மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
எல்லம் கவுடுவின் தொழில் கூட்டாளியாக வெங்கட்ரெட்டி என்பவர் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து மாநிலம் முழுவதும் பல சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன்மூலம் பணம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டதால் வெங்கட்ரெட்டி தலைமையில் மற்றொரு கும்பல் தனியாக செயல்பட்டு வருகிறது.
இவர்களுக்கு இடையே தொழில் போட்டி இருந்தது. இந்நிலையில் நேற்று சித்திப்பேட்டை மாவட்டம் ராமன்சா கிராமம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் எல்லம்கவுடு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட எல்லம்கவுடு கடந்த 2014ல் சாமிர்பேட்டை பகுதியில் கள்ளநோட்டு மாற்றும்போது பிடிக்க வந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதும், இதில் போலீஸ்காரர் சம்பவ இடத்தில் பலியானதும், சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.
இவர் மீது தெலங்கானாவில் 16 வழக்குகள், கர்நாடகாவில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் எல்லம்கவுடுவை தலை துண்டித்து கொன்றதாக கூறி வெங்கட்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் சித்திப்பேட்டை கூடுதல் ஆணையாளர் ராமேஸ்வரராவ் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஊரடங்கிற்கு மத்தியிலும் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in