அதிகாலையில் பயங்கரம்! குடிசை வீட்டிற்குள் பாய்ந்த லாரி!
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர் அருகே உள்ள கரம்பத்தூரில் நேற்று அதிகாலை கரூரில் இருந்து எம்சாண்டு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்த லாரி அதிகாலை நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த குடிசை வீடுகளில் புகுந்து இடித்து தள்ளியது.லாரியை கரூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்தார்.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குமார் (வயது35), கோகிலா (32), கோகுல்நாத் (10) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 3 பேரையும் அருகில் இருந்த கிராமத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்ததாகவும், லாரி வீடுகளுக்குள் புகுந்ததால் சுமன், சேகர், குமார் ஆகியோரது குடிசை வீடுகள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி. உள்பட பொருட்கள் சேதமடைந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.