பள்ளியில் பணி நீக்கம்... வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்!
15 வருடங்களுக்கு மேலாக தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கொரோனாவால் வாழைப்பழ வியாபாரியாக மாற்றியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கட சுப்பையா, பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெங்கட சுப்பையா மற்றும் அவருடன் பணியாற்றும் 5 பேரையும் காணொலியில் அழைத்த பள்ளி நிர்வாகம், வேலை திருப்திகரமாக இல்லை எனக்கூறி வேலையை விட்டு நீக்கியது.
பாடங்களை எடுப்பதைக் காட்டிலும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதே பெரும் பணியாக தனக்கு கொடுக்கப்பட்டதாகவும், அதில் தவறியதால் வேலையை விட்டு நீக்கப்பட்டதாகவும் வெங்கட சுப்பையா தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேறு வழி இல்லாமல் வாழைப்பழம் விற்கத் தொடங்கிவிட்டார் ஆசிரியர். ஆசிரியரின் நிலைமையை அறிந்த அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் அவருக்கு பண உதவி வழங்கியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தமாக 86300 ரூபாயை அவருக்கு வழங்கி உதவி செய்துள்ளனர்.
newstm.in