டிக்டாக் மூலம் இளைஞரிடம் மோசடி.. போலி ஐடியில் வலம்வந்த இளம்பெண்.. !
டிக்டாக்கில் இளைஞரை ஏமாற்றி ரூ. 97,000 மோசடி செய்த இளம்பெண்ணை 24 மணி நேரத்தில் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
தமிழகத்தில் டிக்டாக் வீடியோக்களால் குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனால் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வழக்கமாக ஆண்கள் தான் போலி ஐடி அல்லது வேறுவகையான வீடியோக்களை பதிவிட்டு வம்புகளில் மாட்டுவர். ஆனால் முதல்முறையாக ஒரு பெண்ணை போலி ஐடி மூலம் ஆணிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன்(23), தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் மற்றும் முகநூல் செயலிகளை அளவுக்கு மீறி பயன்படுத்தி வந்துள்ளார்.
தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் டிக்டாக் செயலியில் மூழ்கி கிடந்துள்ளார். இந்நிலையில் டிக்டாக் செயலி மூலம் திருப்பூரை சேர்ந்த சுசி என்கிற பெண் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் ராமச்சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து சுசி என்ற அம்முகுட்டியிடம் டிக்டாக் மூலம் அதீத அன்பு காட்டியுள்ளார் ராமச்சந்திரன். சுசியின் முகநூல் பக்கத்திலும் இணைந்து, இருவரும் பேசி வந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட சுசி தனது குடும்பத்தில் பிரச்னை எனவும், மருத்துவமனை செலவுக்கு பணம் தேவை எனவும் ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார்.
அவர் கூறிய வார்த்தைகளை நம்பிய ராமச்சந்திரன் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு ரூ.97,000 வரை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொண்ட சுசி, சில நாட்கள் பேசாமல் இருந்ததோடு, முகநூல் மற்றும் டிக்டாக் செயலியில் தலைகாட்டாமல் அணைத்து வைத்ததால், சந்தேகமடைந்த ராமச்சந்திரன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திருப்பூர் அருகே ஆலங்காடு பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருந்த இளம்பெண் சுசியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து டிக்டாக் மூலம் மோசடி செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக டிக்டாக்கில் இளைஞர்களுக்கு வலைவீசி வந்த நிலையில், மதுரை இளைஞர் சிக்கியுள்ளார். டிக்டாக் மற்றும் முகநூல் மூலம் பலபேரிடம் இதுபோல பணத்தை மோசடி செய்திருப்பதாகவும் தெரிகிறது. அவை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in