மாணவனை கொடூரமாக தாக்கிய விவகாரம் – ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!!
கோவையில் சட்டையை இறுக்கமாக அணிந்ததற்காக 11ஆம் வகுப்பு மாணவரை தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கலாதரன் என்பவரின் 16 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். பள்ளி திறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாணவருக்கு தைக்கப்பட்ட சட்டை இறுக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற போது, இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் என்பவர், சட்டை ஏன் இறுக்கமாக அனிந்துள்ளாய் என மாணவரை கேட்டுள்ளார். அதற்கு மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, குனியவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் மாணவருக்கு காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற மாணவரின் தந்தை அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
இது தொடர்பாக கலாதரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன்பிறகு சரவணம்பட்டி போலீசார் ஆசிரியர் சிவ ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
newstm.in