நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு !! வணிகர் சங்கங்கள் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20 ந்தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடை வைத்திருந்ததாக கூறி போலீசார், ஜெயராஜை திட்டியுள்ளார்.
இதனால் போலீசாருக்கும், ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்த பென்னிக்ஸ் தனது தந்தையிடம் வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்த போலீசாரிடம் சமாதான பேச முயன்ற போது , அது கைகலப்பு வரையிலும் சென்றதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து, போலீசார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதன் பின்னர் இருவரையும் 21ந்தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
அப்போது, உடல்நலக்குறைவால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இருவரின் இறப்புக்கு சாத்தான்குளம் போலீசார் தான் காரணம் என்றும், விசாரணையின் போது கடுமையாக தாக்கியதே அவர்களின் உயிரிழப்பிற்கு காரணம் என்றும் வியாபாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், வியாபாரிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காவல்துறையினரை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். இதனிடையே, போலீஸ் விசாரணைக்காக சென்ற தந்தை,மகன் இறப்பு குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Newstm.in