அதிர்ச்சி! நீதிபதி முன்பு கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட கைதி!
சிறையில் போலீஸார் கொடுமைப்படுத்துவதாக கூறி கைதி ஒருவர் நீதிபதி முன்பு கழுத்தில் பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். அவரை வேறு ஒரு வழக்கின் விசாரணைக்காக போலீஸார் 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர் .
விசாரணையின்போது, நீதிபதியின் கேள்விகளுக்கு பாண்டியன் அழுதுகொண்டே பதில் சொன்னார். அப்போது பாண்டியன் திடீரென கையில் வைத்திருந்த பிளேடை கழுத்தில் வைத்துக்கொண்டு, சிறைத்துறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக அழுது கொண்டே கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்த பிளேடால் அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால் நீதிபதி உட்பட அனைவரும் பதற்றம் அடைந்தனர். பாண்டியன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அதிகாரிகள் கொடுமைப்படுத்துவது குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும், அதைப்படித்து நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கழுத்தை அறுத்துக்கொண்ட பாண்டியனை போலீசார் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
newstm.in